இறைவன் இறங்கி வந்தால்…

 குறையிலா மக்கள் இடையே

          சாதிகள் சாற்றி விட்டு

மறைவிலே பூசை செய்ய

          ஆங்கோர் சாதி வைத்து

நிறையிலா வாழ்வைக் கொடுத்து

          நீங்கிடா பழியும் தந்த

இறைவன் இறங்கி வந்தால்

          தூக்கில் இடுவது உறுதி.

 

ஆணுக்குப் பெண்சமம் என்று

         பாதியுடல் உமைக்குத் தந்து

அணுக்கன் ஓர்பர நங்கையைக்

           கங்கையில் ஓட விட்டான்.

கரையிலே பாவம் கழுவ

          பாவத்தைச் சுமத்தி விட்ட

இறைவன் இறங்கி வந்தால்

         சிறையில் இடுவது நிச்சயம்.

 

கொடுமை கள்கோ லுயரம்

         வளர்ந்த பின்னே நாட்டில்

நடுநிலை கிடைக்கு மென்று

        நாடிய மனங்கள் இன்று

சிறையிலே வாழும் போதும்

         திறைகட்டச் சொன்னால் – அவர்கள்

இறைவன் இறங்கி வந்தால்

          திறைகட்டிச் செல்வாய் என்பேன்.

 

கொலையும் கொள்ளையும் இலங்கையில்

         கொடூர மான போதும்

தலைமையில் நோபல் பரிசுக்கங்கே

          சமத்துவம் பேச தமிழரிங்கே

மறைவிலும் கற்பு தமதென

          நாட்ட தவிக்கும் போது

இறைவன் இறங்கி வந்தால்

          தமிழரைக் காப்பாய் என்பேன்.

 

நெஞ்சில் அமைதி வேண்டும்

          பேச்சில் துணிவு வேண்டும்

தஞ்சையில் ஆட்சி வேண்டும்

          தானியம் குவிய வேண்டும்

நரையிலும் இளமை வேண்டும்

         இறவாத பிறவி வேண்டும்

இறைவன் இறங்கி வந்தால்

         இத்தனையும் கேட்பது உறுதி.

 

சட்டினிக்குத் தேங்காய் இலையெனும்

          போதும், உனக்கு மட்டும்

தட்டினில் கனிகள் தேங்காயொடு

          சேரும், எட்டணாக் காசில்

அரையணா ஓரணா வென்று

          சேர்த்து, தேங்காய் உடையும்.

இறைவன் இறங்கி வந்தால்

          இந்நிலை மாற்றும் என்பேன்.

 

எல்லா மறிந்த இறைவன்

          கல்லாமல் இருக்க மாட்டான்

கல்லான போழ்தும் அவன்நற்

          சொல்லாற் நிற்பது போல

கரையான் அரித்த மூளையில்

          கலைக்கோயில் எழுப்பு என்று

இறைவன் இறங்கி வந்தால்

          அவனடி தொழுது கேட்பேன்.

 

சமத்துவம் பேசி சமயத்தைச்

          சாடும் சான்றோர் இடையில்

இமயவரன் செய்த பணியிங்கு

          இதயம் வரையில் செல்லுமானால்

விரைவில், சமயம் அழியும்பாதை

          விரைந்து நடக்கும் – இங்கே

இறைவன் இறங்கி வந்தால்

          சொர்க்கத் தீவில்நுழை வதுபோலாம்.

 

மண்ணிடை புதுமை எல்லாம்

          மதியினில் தெளிவைக் காட்டும்

விண்ணிடை புதுமை எல்லாம்

          சிந்தையில் அறிவைக் காட்டும்

பிறையிடை வளமும் தேய்வும்

          மனிதரின் நிலையைக் காட்டும்

இறைவன் இறங்கி வந்தால்

          உனக்கென்ன வேண்டு மென்பேன்.

 

கண்ணிடை கண்ட தெல்லாம்

          கருத்தினில் நிலைப்ப தில்லை

பண்ணிடை வந்த தெல்லாம்

          முழுப்பொருள் உணர்ந்த தில்லை

பாறையில் கண்ட தெல்லாம்

          இறைவனாய் நினைப்ப தில்லை

இறைவன் இறங்கி வந்தால்

          இறையுரு காட்டு என்பேன்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்