திருப்பூர் குமரன்

             முந்நூறு நாளில் கருசிறை முடங்கி

          விடுதலை யானவர் ஒருவர் – அவர்

          நிலைபெறும் கோடி மக்களில் சிறந்து

          தலைதந்து காத்த புனிதர்.

 

          மழலைப் பருவத்தில் ஏழைத் தாயின்

          மடியில் வளர்ந்தவர் அவரே – வளர்ந்து

          இருமூன்று வயதில் ஆரம்பப் பள்ளியில்

          அறிவைப் பெற்றவர் அவரே.

 

          இருபது வயதில் பல்லாண்டு வாழ

          வழியைக் கண்டவர் அவரே – உள்ள

          பல்மொழி இனத்தை ஓரினம் ஆக்க

          நலம்படச் செய்ததும் அவரே.

 

          அன்பும் பண்பும் அமைதியும் நிறைந்த

          ஆண்மை உள்ளவர் அவரே – பிறந்த

          தாய்நாட்டின் மானத்தைத் தரணிபோற்றிட

          உயர்த்திடக் கொடுத்ததும் தலையே.

 

          உயிரைக் கொடுத்தும் கொடியைக் காத்து

          வெள்ளையன் சிந்திக்க வைத்தே – அவர்

          பாரில் பாரத நாட்டின் பெருமையை

          ஓங்க வைத்துமே உயர்ந்தார்.

 

          தணிகை மலையில் திகழ்ந்திடும் குமரன்

          தமிழரின் கடவுள் என்போம் – அவ்விறை

          பெயர்பெற்ற திருப்பூர் குமரனும்

          திருவருள் பெற்றவர் என்போம்.

 

          விடுதலை அடைந்த பாரத நாட்டை

          வழிநடத்திச் செல்வோர் வகிக்கும் கொள்கை

          கொடிபிடித்து நாமும் நாட்டின் சுதந்திரம்

          பேணிக் காப்போம் வாரீர்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்